மாணவிக்கு ஆபாச படங்கள், மெசேஜ் - ஆசிரியர் தலைமறைவு
பிளஸ் டூ மாணவிக்கு ஆபாச படங்கள், மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்து வந்த தனியார் பள்ளியின் ஆசிரியரை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மரப்பாலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் மரப்பாலம் சந்திப்பில் செவன்த் டே என்கிற தனியார் பள்ளி இயங்கி வருகிறது . இந்தப் பள்ளியில் டோனி வளவன் என்பவர் விலங்கியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பிளஸ் டூ படிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மாணவிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஆபாச படங்கள், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.
அந்த சம்பந்தப்பட்ட மாணவிக்கு பெற்றோர்கள் இல்லாததால், தான் தங்கி இருந்த உறவுக்காரர்கள் இடம் இது குறித்து தகவல் சொல்லி இருக்கிறார். இதை அடுத்து மாணவியின் உறவினர்களும், பள்ளி மாணவர்களுடன் இன்று குழந்தைகள் நல அமைப்பினரிடம் சென்று புகார் அளித்துள்ளனர் . இதை அடுத்து முதலியார் பேட்டை காவல் நிலையத்திற்கு புகாரை பரிந்துரை செய்து விட்டு சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றார்கள் அதிகாரிகள் .
பள்ளியில் முதல்வரை முற்றுகையிட்டு சரமாரியான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் பாதிக்கப்பட்டோர் . ஆசிரியரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினால், ஆசிரியரை கைது செய்யாவிட்டால் அனைத்து ஜனநாயக இயக்கங்களை ஒன்று திரட்டி பள்ளிக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர் மாணவ அமைப்புகள்.