ஆந்திராவில் விஷ வாயு கசிவு - 50 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி..
ஆந்திர மாநிலம் அணகாப்பள்ளியில் இயங்கி வரும் தொழிற்சாலை ஒன்றில் விஷவாயு கசிவு ஏற்பட்டதால், அங்கு பணியாற்றிய 50க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவின் அணகாப்பள்ளி மாவட்டம் அச்சுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில், தனியார் ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2000 பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்த போது, தொழிற்சாலையில் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளும் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். நடக்க முடியாமல் இருந்த பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வாயு கசிவு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஊழியர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த இணைக்குழு ஒன்றையும் ஆந்திரப்பிரதேச அரசு அமைத்திருக்கிறது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதமும், அச்சுதாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த வாயு கசிவு ஏற்பட்டதில் 178 பெண் ஊழியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.