அனைவரும் முழு ஆர்வத்துடன் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும் - பிரதமர் மோடி

 
modi

இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் முழு ஆர்வத்துடன் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் ஜெயராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. 68 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கு இன்று தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  அதன்படி இன்று தேர்தல் நடந்து வருகிறது.  இந்த தேர்தலில் 412 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நிச்சயிக்கப்படுகிறது.  இந்த 412 பேரில் 24 பேர் மட்டுமே பெண்கள். 55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் இந்த மாநிலத்தில் உள்ளனர்.  பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் தான் அதிகம்.   இந்த மாநிலத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் உள்ளனர்.  மாநிலத்தில் வாக்களிப்பதற்கு வசதியாக 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு விறுவிறு என்று  நடந்து வருகிறது. மாலை 5:30 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது.

vote

பாஜகவும்,  காங்கிரசும் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கி இருக்கின்றன.  ஆம் ஆத்மி கட்சியும் அத்தனை இடங்களிலும் வேட்பாளர்களை  நிறுத்தி இருக்கிறது.   இடதுசாரி கட்சிகள் 12 இடங்களில் போட்டியிட்டு உள்ளனர்.   காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.  இன்று பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் எட்டாம் தேதி குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குகளுடன் எண்ணப்படும் என்றும் அடுத்த மாதம் எட்டாம் தேதி பிற்பகலில் இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருமா அல்லது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா என்பது தெரிய வரும். 

இந்நிலையில், வாக்காளர்கள் அனைவரும் தமது ஜனநாயக கடமையை ஆற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் முழு ஆர்வத்துடன் பங்கேற்று வாக்களித்து புதிய சாதனை படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முதல் முறையாக வாக்களிக்க உள்ள அனைத்து மாநில இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.