இந்தியாவின் பலமே இளைஞர்கள் தான் - பிரதமர் மோடி பேச்சு

 
modi

இந்தியாவின் பலமே இந்நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்கள் தான் என பிரதமர் மோடி பேசியுள்ளார். 

10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் `ரோஸ்கர் மேளா திட்டத்தின்’ 2வது கட்டமாக 75,000 பேருக்கு வேலை வழங்கும்,  வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் தவிர நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  பிரதமர் நரேந்திர மோடி  காணொளி வாயிலாக கலந்து கொண்டு 75,000 பயனாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் பலமே இந்நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்கள் தான். “கர்மயோகி பாரத்” எனும் வலைதளத்தில் பல ஆன்லைன் படிப்புகள் உள்ளது. அதனை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அது இளைஞர்களின் திறமை அதிகரிப்பதோடு எதிர்காலத்தில் தொழில்களுக்கு உதவும். உலகின் உற்பத்தி சக்தியாக இந்தியா மாறும். ஸ்டார்ட்டப் முதல் சுயதொழில் வரையும், டிரோன்கள் முதல் விண்வெளித்துறை வரையும், இந்தியாவில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளித் துறையை தனியார் நிறுவனங்களுக்காக திறந்து விடுவதன் மூலம் இளைஞர்கள் பெரும் பலன்களைப் பெறுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு, தனியார் விண்வெளி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை இந்தியா கண்டது. இவ்வாறு கூறினார்.