தப்பி ஓடிய 484 குழந்தைகளில் 119 குழந்தைகள் கண்டுபிடிக்க முடியாத நிலை
பாதுகாப்பு மையங்களில் இருந்து தப்பி ஓடிய 484 குழந்தைகளில் 119 குழந்தைகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் குழந்தை பாதுகாப்பு மையத்திலிருந்து தப்பிச் சென்ற குழந்தைகள் குறித்தும், அவர்களை கண்டுபிடிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும் என கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகண்ணா என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் நடந்த போது, கடந்த விசாரணையின் போது மாநிலத்தில் காணாமல் போன குழந்தைகளை குறித்தும் அதற்காக அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யும் படி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
அந்த உத்தரவின் படி நேற்று முன்தினம் நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில் , மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திலிருந்து இதுவரை 484 குழந்தைகள் காணாமல் போய் இருக்கிறார்கள் என்றும், அவர்களில் 352 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும், 110 குழந்தைகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
காணாமல் போனவர்களில் இரண்டு பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாகி மரணமடைந்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கண்டு பிடிக்க முடியாமல் இருக்கும் 119 குழந்தைகளில் 66 பேர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்றும், போலீசார் அது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் , மற்ற 53 குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக காவல் நிலையங்களில் வழக்கு பதிவு ஆகியிருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
352 குழந்தைகளில் 340 பேர் தங்களது பெற்றோரிடம் தற்போது வசித்து வருவதற்கான தகவல் கிடைத்திருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.