கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்.. - மக்கள் பாதுகாப்பாக இருக்க முதல்வர் பினராயி அறிவுறுத்தல்..
கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என 7 மாவட்டங்களுக்கு வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவம் மழை தொடங்கியது. அப்போது தொடங்கி முதல் இரண்டு வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்த நிலையில், அதன்பிறகு பருவமழை தீவிரமடைந்தது. பின்னர் மீண்டும் மழை குறைவதும் தீவிரமடைவதுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரமாக கேரளாவில் மலையோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால், அம்மாநிலத்தில் பெரும்பாலான சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இதனையடுத்து திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை ( ஆரஞ்சு அலெர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், தொடர் மழை காரணமாக மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மழையின் தாக்கம் அதிக அளவில் காணப்படும் எனவும், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 நாட்கள் கன மழை பெய்யும் என்பதால் பாதுகாப்பாக இருக்க அம்மாநில முதலமைச்சல் பினராயி விஜயன், மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை உடனே சரி செய்ய, கேரள அரசு, தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.