அடுத்தடுத்து தீ பிடிக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியிட்ட OLA நிறுவனம் ..
அடுத்தடுத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்து ஏற்படுவதால், தங்களது வாகனங்களை திரும்பப்பெறுவதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மின்சார ஸ்கூட்டர்கள் ( இ- ஸ்கூட்டர்கள்) தீ பிடித்து எரியும் சம்பவங்கள் தினசரி கேட்கும் செய்தியாக மாறிவிட்டது, அந்த அளவிற்கு பல சம்பவங்கள் நடந்துள்ளன. உதாரணமாக, மார்ச் 26 புனேவில் ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டர் ஒன்று எரிந்து நாசமானது. இதேபோல் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் வீட்டில் ஜார்ஜ் போட்டு வைத்திருந்த ஸ்கூட்டர் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டதால் தந்தை மகள் என இருவர் உயிரிழந்தனர். இதேபோல் சென்னையிலும் இ-ஸ்கூட்டர் ஒன்று தீ பற்றி எரிந்தது.
அத்துடன் புனே நெடுஞ்சாலையில் எலக்ட்ரின் ஸ்கூட்டர்கள் ஏற்றிச் சென்ற லாரியில் நிறித்தி வைக்கப்பட்டிருந்த 20 இ- ஸ்கூட்டர்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் சென்னையிலும் ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 17 இ- ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்தன. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கூட ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மின்சார ஸ்கூட்டர் வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற அடுத்தடுத்த சம்பவங்களால் மின்சார வாகனத்தின் மீதான ஆசையே மக்களுக்கு போய்விட்டது, அத்துடம் இ-ஸ்கூட்டர் அச்சம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
இதனையடுத்து இ- ஸ்கூட்டர் விபத்துகள் குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்யும் என்றும், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய சாலை போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரித்திருந்தார். இதனையடுத்து ஓலா நிறுவனம், தனது 1,441 யூனிட் எஸ்1 புரோ எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை தாமாக முன்வந்து திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. அனைத்து ஸ்கூட்டர்களும் சேவை பொறியாளர்களால் பரிசோதிக்கப்படும் என்றும், அனைத்து பேட்டரி, வெப்ப அமைப்பு மற்றும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு சரிசெய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
முன்னதாக தமிழகத்தில் ஒகினவா ஆட்டோடெக் டீலர்ஷிப்பில் இ ஸ்கூட்டர் ஒன்று வெடித்துச் சிதறியது. இதையடுத்து ஏப்ரல் 16 ஆம் தேதி ஒகிவானா ஆட்டோடெக் நிறுவனம், தனது 3 ஆயிரத்து 215 வாகனத்தையும் திரும்பப்பெறுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.