இனி இரு விரல் சோதனை நடத்த தடை! பாடத்திட்டத்தில் இருந்து நீக்கவும் உத்தரவு -பாலியல் வழக்குகளில் உச்சநீதிமன்றம் அதிரடி
பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இனிமேல் இருவிரல் சோதனை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது . மருத்துவ கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இருந்தும் இரு விரல் பரிசோதனை தொடர்பான பாடங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் பேரில் அந்த குற்றச்சாட்டினை உறுதி செய்ய, பெண்ணின் கன்னித்தன்மையை உறுதி செய்வதற்காக, இரு விரல் பரிசோதனை செய்யப்படுவது உண்டு. அதாவது பெண்ணின் கருப்பை வாய்ப்பகுதியை மருத்துவர்கள் கையால் ஆராய்வர். அப்போது கன்னித்திரை கிழிந்து இருப்பதை வைத்து அப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பதை மருத்துவர்கள் உறுதி செய்வார்கள்.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வு முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது . அப்போது பாலிய பாலியல் வன்கொடுமையில் பாதிப்பிற்கு உள்ளான நபருக்கு இருவிரல் சோதனை நடத்தக் கூடாது. இந்த நடைமுறை இன்றைக்கும் நடைமுறையில் இருப்பது துரதிஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளனர் நீதிபதிகள்.
இந்த சோதனை என்பது ஆணாதிக்க மனோபாவம் கொண்டது என்றும், இதில் எந்த அறிவியல் தன்மையும் இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்று மத்திய, மாநில சுகாதாரத்துறையினர் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இருந்தும் இரு விரல் பரிசோதனை தொடர்பான பாடங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.