நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் - லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு
நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை லண்டன் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பெற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பி சென்று விட்டார். சிபிஐ புகாரின் பேரில் லண்டனில் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளாக லண்டன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
லண்டன் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் சிபிஐ அதிகாரிகள். இது தொடர்பாக லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
நீரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அபாயம் குறித்து விசாரிக்கப்பட்டு இருக்கிறது, சிறையில் நீரவ் மோடியிடம் நேரடியாக ஆய்வு செய்த இரண்டு உளவியல் நிபுணர்கள், அவர் மன அழுத்தத்துடனும் தற்கொலை எண்ணத்துடனும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியாவில் நீரவ் மோடிக்கான பாதுகாப்பு குறித்து இந்திய அதிகாரிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதியளித்துள்ளார்.
இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது தனிப்பட்ட நலனை காப்பதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.
இதை அடுத்து நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனநிலை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் இருப்பதை காரணமாக சொல்லி இந்தியாவில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் பண மோசடி வழக்குகளை எதிர்கொள்வதில் இருந்து தப்பிப்பது நியாயமாகாது என்று லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது .
இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டனில் உள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது சரியே என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.