தேசியவாத காங்கிரஸ் தலைவர் மருத்துவமனையில் அனுமதி.. ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்பாரா?
உடல் நிலை மோசமடைந்ததால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று முன்தினம் மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாட்டின் மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த திங்கட்கிழமையன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வரும் புதன்கிழமை (நவம்பர் 2ம் தேதி) சரத் பவார் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.ஷீரடியில் நவம்பர் 4-5 தேதிகளில் நடைபெறும் கட்சி முகாம்களில் சரத் பவார் பங்கேற்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சரத் பவார் கடந்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சரத் பவாரின் பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது இதனையடுத்து மறுநாள் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மகாராஷ்டிராவில் நுழைந்த அடுத்த நாளான 8ம் தேதியன்று, ராகுலின் நடைப்பயணத்தில் சரத் பவார் பங்கேற்பார் என கூறப்படுகிறது. இருப்பினும், அப்போது அவர் உடல் நலம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்துான் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பற்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.