ஞானவாபி மசூதி விவகாரம்... நீதிமன்றத்தின் தீர்ப்பு பா.ஜ.க.வின் கதையை ஆதரிக்கிறது... மெகபூபா முப்தி

 
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை மக்கள் ஜனநாயக கட்சி கை விடாது….. இல்டிஜா முப்தி உறுதி..

ஞானவாபி மசூதி வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு பா.ஜ.க.வின் கதையை ஆதரிக்கிறது என்று மெகபூபா முப்தி  தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபட அனுமதிகோரி, 5 இந்து பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து ஞானவாபி மசூதியை கள ஆய்வு செய்ய வாரணாசி மாவட்டம் நீதிமன்றம் உத்தரவிட்டது.  நீதிமன்றத்தின் உத்தரவுபடி களவு ஆய்வு செய்யப்பட்டது. அதேசமயம் மசூதி வளாகத்தை களஆய்வு செய்ய அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

ஞானவாபி மசூதி

இதற்கிடையே, ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததில்லை என்று மசூதி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தநிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 12) வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை இம்மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

பா.ஜ.க.

ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மெகபூபா முப்தி கூறியிருப்பதாவது: இந்த முடிவு கலவரத்தை தூண்டும் மற்றும் ஒரு வகுப்புவாத சூழலை உருவாக்கும். இது பா.ஜ.க.வின் செயல்திட்டத்தில் முரண்பாடாக விளையாடுகிறது. 1947ம் ஆண்டு மத தலங்களின் நிலையே தொடரப்பட வேண்டும் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை மற்றும் பணவீக்கத்தை ஒழிப்பதில் பா.ஜ.க தவறி விட்டது. அதனால் மக்களின் கவனத்தை திசை திருப்ப நினைக்கிறார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பு பா.ஜ.க. கதையை ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.