பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க மாட்டோம்... மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா திடீர் அறிவிப்பு

 
கான்ராட் சங்மா

இன்னும் சில மாதங்களில் மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற நிலையில், பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அம்மாநில முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய மேகாலயா அரசின் பதவி காலம் எதிர்வரும் மார்ச் 5ம் தேதி நிறைவடைய உள்ளது. இதனால் 60 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல்  அடுத்த சில மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பொது சிவில் சட்டம்

மேகாலயா சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என்று முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் கான்ராட் சங்மா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: ஒரு அரசியல் கட்சியாக, பொது சிவில் சட்டம் என்பதை தேசிய மக்கள் கட்சியால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். சட்டம் மேகாலயா மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை பாதிக்கக்கூடாது. சில பகுதிகளில் சில விஷயங்களை செய்ய மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் அவை நமக்கு தெரியாத விஷயங்கள்.

மத்திய அரசு

குழந்தைகளுக்கு சொத்து எப்படி மாற்றப்படும் என்பதையும் பொது சிவில் சட்டம் வரையறுக்கும். எனவே நாட்டின் பிற பகுதிகளில் செய்வது போல்  மூத்த மகனுக்கு செல்ல வேண்டும் என்று பொது சிவில் சட்டம் கூறினால், பல பழங்குடியினரில் இளைய மகளுக்கு நாம் சொத்து கொடுக்கும் மாநில கலாச்சாரத்துடன் அது செல்லாது. பொது சிவில் சட்டத்தின் முழு கருத்தும் மேகாலயா மாநிலத்தின் கலாச்சார நடைமுறைகளை மாற்றியமைக்க முடிந்தால், அதனை ஒரு மாநிலமாக, ஒரு கட்சியாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த மாதம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ராஜஸ்தான் எம்.பி. கிரோடி லால் மீனா, பொது சிவில் சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் அவையில் குழப்பம் ஏற்பட்டது.