சிறையில் சொகுசு வாழ்க்கை : சுகேஷிடமிருந்து மாதம் 1.5 கோடி லஞ்சம் பெற்ற சிறை அதிகாரிகள்..

 
சிறையில் சொகுசு வாழ்க்கை : சுகேஷிடமிருந்து மாதம் 1.5 கோடி லஞ்சம் பெற்ற சிறை அதிகாரிகள்..

டெல்லி சிறைச்சாலையில் உள்ள இடைத்தரகர்  சுகேஷ் சந்திரசேகர்  செல்ஃபோன் பேசவும், சொகுசாக  இருக்கவும்  , 81  சிறை  அதிகாரிகளுக்கு  மாதம்  ரூ.1.5  கோடி லஞ்சம் வழங்கியதாக  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  
 
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், இரட்டை இலை சின்னத்துக்காக அதிமுகவினரும், டிடிவி தினகரன் இடையே போட்டி நிலவியது.   அப்போது இடைத்தரகராக செயல்பட்டு சின்னத்தை மீட்க , டெல்லி குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்தான் இந்த சுகேஷ் சந்திரசேகர். 2017 ஆம் ஆண்டு டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு , திஹார் சிறையில் அடைக்கப்பட்ட இவர் மீது, 21க்கும் அதிகமான மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

‘இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம்’  சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் சோதனை ; வாயடைத்து போன அதிகாரிகள்!
 
சிறையில் இருந்தபடியே, பிரபல தொழிலதிபர் ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் ரூ. 200 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்டார். சிறையில் இருக்கும் தனது கணவரை ஜாமீனில் எடுக்க உதவுவதாக கூறி, பணம் பெற்றதாக அதிதியே புகார் அளித்திருந்தார். சிறையில் இருந்தபடியே அவரது மனைவியும், நடிகையுமான லீனா மரியா மூலம்  மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவரும் கைது செய்யப்பட்டு  டெல்லி திகார் திறையில் அடைக்கப்பட்டார்.  

இதற்கிடையே, டெல்லி சிறையில் இருந்து தன்னை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், சிறை அதிகாரிகள் 2 ஆண்டில் தன்னிடம் இருந்து ரூ.12.5 கோடி லஞ்சம் வாங்கி இருப்பதாகவும் சுகேஷ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்திருக்கிறார்.  பெரும் பேசுபொருளான இந்த விவகாரம் குறித்து   பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி  விசாரணையில் பல அதிர்ச்சிகர  தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சுகேஷிடம் ரோகினி சிறை அதிகாரிகள், ஊழியர்கள் என 81க்கும் மேற்பட்டோர் லஞ்சம் வாங்கியுள்ளது உறுதியாகியுள்ளது.  அவர்கள் தான் சுகேஷுக்கு செல்போன் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளதும்  தெரியவந்துள்ளது.

சிறையில் சொகுசு வாழ்க்கை : சுகேஷிடமிருந்து மாதம் 1.5 கோடி லஞ்சம் பெற்ற சிறை அதிகாரிகள்..

மேலும், சுகேஷின் மனைவி லீனா சிறையில் எந்த சிரமமும் இல்லாமல் இருக்க சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர்.  இதற்காக  சுகேஷிடமிருந்து மாதம் ரூ.1.5 கோடியை  அதிகாரிகள் லஞ்சமாக பெற்று, அதை  அனைவரும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.  அத்துடன்  ,  சுகேஷ் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில்  வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் அவர்கள் மறைத்திருக்கின்றனர்.  திரைச்சீலை, பெட்டிகள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை வைத்து  சிசிடிவியில் எதுவும் சரியாக தெரியாதபடி மறைத்துள்ளனர்.  இதனையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்  லஞ்சம் வாங்கியதற்காக  81 சிறை அதிகாரிகள், ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே ஆதாரங்களின் அடிப்படையில் 8 சிறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,