இந்தியாவில் 20ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு !!
இந்தியாவில் ஒரேநாளில் 20,139 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் மீண்டும் இந்தியாவில் கொரோனா தாக்கம் விஸ்வரூபம் எடுத்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 20,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 16,906 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 86 ஆயிரத்து 989 ஆக பதிவாகியுள்ளது.
இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 16,482 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,30,28,356ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 1,36,076 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 38 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 5,25,557 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 199.27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.