நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19,673 பேருக்கு கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களை விட குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு தாண்டி பதிவாகி வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. நேற்று 20,408 பேருக்கும், நேற்று முன் தினம் 20,409 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 19,673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்தை தாண்டியுள்ளது. ஒரேநாளில் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 5,26,357 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 19,336 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4.33 கோடியை தாண்டியுள்ளது. தற்போது வரை இந்தியாவில் 1,43,676 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 31 லட்சத்து 36 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 204 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.