நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் குறித்து துப்பு கொடுத்தால் ரூ. 25 லட்சம் சன்மானம் - என்.ஐ.ஏ அறிவிப்பு...
நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிம் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
1993-இல் மும்பையில் நிகழ்ந்த தொடா் குண்டுவெடிப்பில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவர் தாவூத் இப்ராஹிம். இவரை தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியா அறிவித்திருக்கிறது. பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வரும் தாவுத் இப்ராகிம், பாகிஸ்தானில் கராச்சி நகரில் வசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்த அவரது கூட்டாளிகள் , இந்தியாவில் செயல்படும் டி நிறுவனம் மூலம் ஆயுதங்கள் , வெடிபொருட்கள், போதைப்பொருட்கள் மற்றும் கள்ள நோட்டுக்களை கடத்தியது குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு .25 லட்சம் ரூபாயும், , அவரது கூட்டாளி சோட்டா ஷகீல் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்திருக்கிறது. அவரது சகோதரர் அனீஷ் இப்ராகிம், கூட்டாளிகள் டைகர் மேமன், ஜாவேத் சிக்னா ஆகியர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.