ராகுல் இல்லைனா இவர்தான்.. காங். தலைவர் பதவிக்கு போட்டியிட ஆயத்தமாகும் அசோக் கெலாட்..
காங்கிரஸ்தான் கட்சியின் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடவில்லை என்றால், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தங்கள் குடும்பத்தை சேர்ந்த எவரும் வர மாட்டார்கள் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறி வரும் நிலையில், அவரை தலைவர் பதவியில் நியமனம் செய்ய சோனியா காந்திக்கு அதிகாரம் வழங்கி பல்வேறு மாநில காங்கிரஸ் கமிட்டிகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லி சென்றுள்ள ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சோனியா காந்தியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது, அசோக் கெலாட்டை தலைவர் பதவியில் போட்டுயிடுமாறு சோனியா அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட், கடைசி முயற்சியாக ராகுல் காந்தியை சந்தித்து தலைவர் பதவியில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வேன் என்று கூறியுள்ளார். அவர் ஒப்புக்கொள்ள மறுத்தால் காங்கிரஸ் மேலிடத்தின் விருப்பத்தின் படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் சூசகமாக தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் மேலிடம் எனக்கு பல பதவிகளை கொடுத்திருக்கிறது என்றும், 50 ஆண்டுகளாக நான் பதவிகளில் இருந்து வருகிறேன் என்றும் குறிப்பிட்ட அவர், எனக்கு பதவி முக்கியமில்லை; கட்சி வழங்கும் பொறுப்பை ஏற்று செயல்படுவேன் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் ஓர் அங்கமாக கேரளாவில் உள்ள ராகுல் காந்தியை, அசோக் கெலாட் சந்தித்து பேச உள்ளார். அப்போது காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர். அத்துடன் ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை டெல்லி வருமாறும் அசோக் கெலாட் அழைத்துள்ளார். ஆகையால் வருகிற 26ம் தேதி அசோக் கெலாட் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் ராஜஸ்தானை சேர்ந்த மற்றொரு காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். காங்கிரஸ் தலைவராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்படும் பட்சத்தில், ராஜஸ்தான் முதலமைச்சர் பதவிக்கு சச்சின் பைலட் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது