கொட்டித்தீர்க்கும் கனமழை... மகாராஷ்டிராவில் இதுவரை 76 பேர் உயிரிழப்பு..
மகாராஷ்டிராவில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக கடந்த ஜூன் 1ஆம் தேதி 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் தலைநகர் மும்பை உள்பட பல்வேறு இடங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதில் கடந்த ஒரு வாரமாக பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மும்பை பெருநகரம் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொங்கன் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 13-ந் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து மும்பை உள்பட கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தபட்டுள்ளனர். இதேபோல் ராய்காட், ரத்னகிரி, சத்தாரா, கோலாப்பூர் ஆகிய நிலச்சரிவு அபாயம் உள்ள மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த மாதம் ஜூன் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை மழையால் 76 பேர் பலியாகியிருக்கின்றனர். இதில் கடந்த சனிக்கிழமை மட்டும் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களில் 4 பேர் வார்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் கட்சிரோலியில் 3 பேர், நான்தெட், சிந்துதுர்க்கில் தலா ஒருவர் இறந்திருக்கின்றனர்.