டெல்லியில் கடும் பனிமூட்டம்.. ரயில், விமான சேவைகள் பாதிப்பு ..

 
delhi

டெல்லியில் கடும்  பனிமூட்டம் காரணமாக ரயில் சேவை, விமான சேவைகள்  பாதிக்கப்படுவதால் பயணிகள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.

தலைநகர் டெல்லி உள்பட உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் இருந்து வருகிறது.  அதேபோல்  கிழக்குப்பகுதி மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும், வடமாநிலங்களில் காலை வேளையில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. விடியற்காலை நேரங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டத்தால்,  எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர்.

டெல்லியில் கடும் பனிமூட்டம்.. ரயில், விமான சேவைகள் பாதிப்பு ..

அதுமட்டுமின்றி, சாலைகளும்  சிறிது தொலைவு மட்டுமே  தெரிவதால் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி  வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.  டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக குறைந்திருக்கிறது.  இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி வரை அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால், ரயில்கள் தாமதமாகவே இயக்கப்படுகின்றன. விளக்குகளை எரியவிட்டபடி சென்றாலும், ரயில்களை இயக்குவதில் சிரமம் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 

அதேபோல் டெல்லி விமான நிலையத்துக்கு வரவேண்டிய விமானங்களும் தாமதமாக வந்து சேர்கின்றன. இங்கிருந்து புறப்படும் விமானங்களும்  அடர் பனிமூட்டத்தால் தாமதமாக புறப்படும் நிலை உள்ளது. அத்துடன் நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து சுமார் 60 விமானங்கள் டெல்லிக்கு தாமதமாக வந்து சேர்ந்தன. அதேபோல் 22 சர்வதேச விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.