ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் - இமாச்சல பிரதேச முதலமைச்சர்

 
jairam thakur

ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என இமாசல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் கூறியுள்ளார். 

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஜெயராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.   68 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கு இன்று தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  அதன்படி இன்று தேர்தல் நடந்து வருகிறது.  இந்த தேர்தலில் 412 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நிச்சயிக்கப்படுகிறது.  இந்த 412 பேரில் 24 பேர் மட்டுமே பெண்கள். 55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் இந்த மாநிலத்தில் உள்ளனர்.  பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் தான் அதிகம்.   இந்த மாநிலத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் உள்ளனர்.  மாநிலத்தில் வாக்களிப்பதற்கு வசதியாக 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு விறுவிறு என்று  நடந்து வருகிறது. மாலை 5:30 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது.

vote

பாஜகவும்,  காங்கிரசும் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கி இருக்கின்றன.  ஆம் ஆத்மி கட்சியும் அத்தனை இடங்களிலும் வேட்பாளர்களை  நிறுத்தி இருக்கிறது.   இடதுசாரி கட்சிகள் 12 இடங்களில் போட்டியிட்டு உள்ளனர்.   காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.  இன்று பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் எட்டாம் தேதி குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குகளுடன் எண்ணப்படும் என்றும் அடுத்த மாதம் எட்டாம் தேதி பிற்பகலில் இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருமா அல்லது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா என்பது தெரிய வரும்.

வாக்குப்பதிவை முன்னிட்டு, இமாசல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர், மாண்டி மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினார். தனது குடும்பத்துடன் செராஜ் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மாண்டி மாவட்டத்தில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிக பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கேற்ற தகவலும் கிடைத்து உள்ளது. இதனை விட மிக முக்கியம், மக்கள் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர். நல்ல முறையில் பிரசாரம் முடிந்ததில் மகிழ்ச்சி. மக்களும் ஒத்துழைப்பு அளித்தனர். இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அனைத்து வாக்காளர்களும் இன்று தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும். அதனால், நமது ஜனநாயகம் இன்னும் வலுப்படும் என அவர் கூறியுள்ளார்