70% மார்க்.. ஆனா ஒரு வார்த்தை கூட அங்கிலம் தெரியல.. அமெரிக்காவை அதிரவைத்த குஜராத் IELTS தேர்வு மோசடி..
குஜராத்தில் நடைபெற்ற IELTS என்று அழைக்கப்படும் சர்வதேச ஆங்கில தகுதி தேர்வில் பலர் ஆள்மாறாட்டம் செய்து மோடசியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் IELTS என்று அழைக்கப்படும் சர்வதேச ஆங்கில தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த தேர்வில் மோசடி நடந்திருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி கனடா நாட்டில் இருந்து 6 இளைஞர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். இதனையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். விசாரணையில் தான் அவர்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் நீதிமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்களால் ஒரு வார்த்தைக்கூட ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியவில்லை. பின்னர் இந்தி மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் விசாரணை நடத்தியதில், 6 பேரும் குஜராத்தில் நடத்தப்பட்ட IELTS எனப்படும் ஆங்கில தகுதி தேர்வு எழுதி கனடா சென்றவர்கள் என்பதும், அங்கிருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றதும் தெரியவந்தது. வெளிநாட்டவர்கள் கனடாவிற்கு வர வேண்டும் எனறால் IELTS தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உள்ளதால், 6 பேரிடமும் IELTS தேர்வு எழுதினீர்களா? என நீதிபது கேள்வி எழுப்பினார். அதற்கு IELTS தேர்வில் 70% க்கு மேல் மதிப்பெண் பெற்றதாக 6 பேரும் தெரிவித்திருக்கின்றனர்.
அப்படி இருக்கும்பட்சத்தில் ஒரு வார்த்தை கூட அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச தெரியாததை கண்டு நீதிபது அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டதன்பேரில், 6 பேரும் முறைகேடாக ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மும்பையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் மூலம் குஜராத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் தனிப்படை அமைத்து குஜராத் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் 6 பேரும் கடந்த ஆண்டு ( 2021) செப்டம்பர் மாதம் நவ்சாரி மாவட்டத்தில் IELTS தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி , இந்த ஆண்டு மட்டும் குஜராத்தை சேர்ந்த 950 மாணவர்கள் அந்த தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேட்டில் ஈடுபட்டதும், மோசடியாக சான்றிதழ் பெற்றதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்வு அறைக்குள் சிசிடிவி கேமராக்கள் ஆஃப் செய்துவிட்டு அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதும், ஆள்மாறாட்டம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. மேலும், அமெரிக்கா, கனடா செல்ல ஒவ்வொருவரும் தலா ரூ.14 லட்சம் கொடுத்து IELTS சான்றிதழை முறைகேடாக பெற்றிருக்கின்றனர்.
முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரும் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கலாம் என்பதால் அவர்களை கண்டறியும் நடவடிக்கையை போலீசார் தீவிரபடுத்தியுள்ளனர். இந்த தேர்வு முறைகேட்டிற்கு மெக்சானாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் மூளையாக செயல்பட்டதாகவும், அவரை கைது செய்யும் நஃப்டவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 140 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட IELTS தேர்வில், பல ஆண்டுகளாக குஜராத்தில் பெரும் முறைகேடு நடந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.