ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு தூக்கு தண்டனை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. புதுமணத் தம்பதி கொலை வழக்கில் இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பதாவ் மாவட்டம். இம் மாவட்டத்தில் உரைனா கிராமத்தைச் சேர்ந்த கோவிந்த் என்கிற 24 வயது இளைஞரும், ஆஷா என்கிற 22 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டில் இவர்கள் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் பின்னர் டெல்லிக்குச் சென்று தங்கள் வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்கள்.
டெல்லிக்கு சென்ற சில வாரங்களிலேயே ஆசாவின் தந்தை கிஷன் பால் டெல்லிக்குச் சென்று, பாசமாக பேசி இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். தம்பதிகளும் அவரின் பேச்சை நம்பி அவருடன் சென்றிருக்கிறார்கள். வீட்டிற்கு சென்றதும் இரண்டு பேரையுமே கொடூரமாக கொலை செய்திருக்கிறார் கிஷன் பால்.
கிஷன்பாலின் மனைவி ஜல்தாரா, அவர்களது மகன்கள் விஜய் பால், ராம் வேல் ஆகியோரும் இந்த படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்து உள்ளார்கள். இதை அறிந்த கோவிந்தின் தந்தை பப்பு சிங் போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.