குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : எதிர்கட்சிகளின் வேட்பாளர் அறிவிப்பு
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநரான மார்கரெட் ஆல்வா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி புதிய இந்திய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை மறுநாள்( ஜூலை 19) கடைசி நாளாகும். இதில் பாஜக சார்பில், தங்களுடைய வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கரை நேற்று அறிவித்தது. இந்நிலையில் இன்று எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வாவின் பெயரை எதிர்கட்சிகள் அறிவித்திருக்கின்றன.
இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் இல்லத்தில், இன்று ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக இடதுசாரி கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி மற்றும் பிற முக்கிய எதிர்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக மார்கரெட் ஆல்வாவின் பெயர் இறுதி செய்யப்பட்டது.
அதேபோல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதை ஒட்டி, அதற்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அதன் வேட்பாளராக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மூ தேர்வு செய்யப்பட்டார். இவர் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த யஷ்வந்த் சின்ஹாவை தங்களுடைய வேட்பாளராக எதிர்கட்சிகள் அறிவித்திருந்தன.