இந்தி விவகாரம் - புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்

 
porest


புதுச்சேரியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் இந்தியை கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்  சிவா தலைமையில் ஜிப்மர் எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட  500 க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இனி வரும் காலங்களில் அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கையை புதுச்சேரி ஜிம்பர் இயக்குநர் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

Jipmer

இந்நிலையில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக இந்தியை கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த உத்தரவை திரும்ப வலியுறுத்தியும் புதுச்சேரி திமுக சார்பில் ஜிப்மர் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான இரா.சிவா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார்,  சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் 100 க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்று ஜிப்மர் நிர்வாகம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்களுடைய எதிர்ப்பினை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட  500 க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.