தொடரும் சோகம்! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமி மரத்தின் கிளையில் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பழங்குடியின சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரம் ஜார்கண்ட் மாநிலத்தில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் தும்கா பகுதியைச் சேர்ந்த 14 வயது பழங்குடியின சிறுமி நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் இருக்கும் மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கியிருக்கிறார். இதை கண்ட அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேடஹ் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் சிறுமியின் மரணத்திற்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி அர்மன் அன்சாரி என்கிற இளைஞர் சிக்கினார். இந்த சிறுமிக்கு திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.
அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். அந்த சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி வந்தனர். அர்மன் அன்சாரியிடம் விசாரணை நடத்தியதில், பாலியல் வன்கொடுமை செய்தது உண்மை. ஆனால் நான் கொலை செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
இதுகுறித்து ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், துர்காவில் நடந்த சம்பவத்தால் நான் மிகவும் வருத்தம் அடைந்து இருக்கிறேன். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சிறுமியின் குடும்பத்திற்கு நீதியை உறுதி செய்கின்ற வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கச்சொல்லி போலீசுக்கு உத்தரவிட்டிருக்கிறேன் என்கிறார்.
இதே துர்கா பகுதியில் 16 வயதுடைய அங்கீதா என்கிற சிறுமி இரண்டு பேரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன. தற்போது பழங்குடியின சிறுமி மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.