ராணி எலிசபெத் மறைவிற்கு ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு

 
central govt

ராணி எலிசபெத்தின் மறைவிற்கு இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இங்கிலாந்து ராணி எலிசபெத் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அவருக்கு சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், பிரான்ஸ் மன்னருக்கு அடுத்து ஒரு அரசை அதிக காலம் (70 ஆண்டுகள்) ஆட்சி செய்தவர் என்ற பெருமையுடன் விடைபெற்றார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். இவர், கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்தார்.

queen

ராணி எலிசபெத்தின் மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, மகாராணி இரண்டாம் எலிசபெத் நம்முடைய காலத்தின் உறுதியானவராக நினைவுகூரப்படுவார். அவர் தன்னுடைய தேசத்திற்கும் மக்களுக்கும் ஊக்கமளிக்கும் தலைமையை வழங்கினார். பொது வாழ்வில் கண்ணியத்தையும் நேர்மையையும் வெளிப்படுத்தினார். அவருடைய மறைவால் வேதனை அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவருடைய குடும்பத்தினருடனும் இங்கிலாந்து மக்களுடனும் உள்ளன. 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு என்னுடைய இங்கிலாந்து பயணத்தின்போது மகாராணி இரண்டாம் எலிசபெத் உடன் நான் மறக்கமுடியாத சந்திப்புகளை மேற்கொண்டேன். அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார். அந்த சைகையை நான் எப்போதும் போற்றுவேன்" என்று பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில், ராணி எலிசபெத்தின் மறைவிற்கு இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது வருகிற 11ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.