பாதயாத்திரையில் கே.ஜி.எஃப் 2 பாடலை பயன்படுத்தியதாக புகார் - ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு

 
rahul

கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ராகுல் காந்தி உள்பட மூன்று பேர் மீது காப்புரிமை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கும் வகையில், 'பாரத் ஜோடோ' எனப்படும் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி  தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து அவர் தனது யாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா என நான்கு மாநிலங்களில் தனது பாதையாத்திரையை நிறைவு செய்துள்ள ராகுல் காந்தி, தற்போது தெலுங்கானாவில் தனது பாதயாத்திரையை தொடர்ந்து வருகிறார்.  

kgf 2

இந்நிலையில், கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ராகுல் காந்தி உள்பட மூன்று பேர் மீது காப்புரிமை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெங்களூருவை சேர்ந்த எம்ஆர்.டி மியூசிக் என்கிற தனியார் நிறுவனம் தான் இந்த புகாரை கொடுத்துள்ளது. ராகுல் காந்தி நடைபயணம் செல்லும் வீடியோக்களை காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு வீடியோவில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர். அது தங்களிடம் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் ராகுல் காந்தி உள்பட மூவர் மீது இந்த காப்புரிமை மீறல் புகாரை கொடுத்துள்ளது. இதனையடுத்து ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது