பஞ்சாப் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்..
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தனியார் பள்ளிக்கு, அதே பள்ளியில் படித்து வரும் மாணவர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள டிஏவி பப்ளிக் பள்ளிக்கு கடந்த 7 ஆம் தேதி வெடிகுண்டு மிரட்டல் மற்றும் பள்ளி முதல்வருக்கு துப்பாக்கிச்சூடு மிரட்டல் வந்துள்ளது. இன்ஸ்டகிராம் மூலமாக ஆங்கிலம் மற்றும் உருதுவில் அந்த மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து பள்ளி முதல்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, பின்னர் விசாரணையில் அது அதே பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்களின் செயல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக போலீசார் நள்ளிரவு சோதனைகள் மேற்கொண்டனர். இதுகுறித்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக தற்போது மீண்டும் ஓரு மிரட்டல் வந்திருக்கிறது.
தொலைபேசி வாயிலாக, செப்டம்பர் 16-ம் தேதி பள்ளியை வெடி வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்ததை அடுத்து, அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில், கணித தேர்வை ரத்து செய்வதற்காக அப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவனே மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் மாணவனின் தந்தையின் மொபைல் போனில் இருந்து பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது இது இரண்டாவது முறையாகும். இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டலால் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியினரிடையே பீதியையும் பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது.