குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி, சமரசம் என்ற கேள்விக்கே இடமில்லை.. கர்நாடக முதல்வர்

 
வன்முறை நடந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசார்

ஹூப்ளி காவல் நிலையம் தாக்குதலில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமரசம் என்ற கேள்விக்கே இடமில்லை என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை இரவு கர்நாடக மாநிலம் பழைய ஹூப்ளி காவல் நிலையத்துக்கு திடீரென ஏராளமாக மக்கள் வந்த காவல் நிலையத்தை நோக்கி கற்களை  வீச தொடங்கினர்.  இதனையடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனையடுத்து மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் போலீசார் காயமடைந்தனர். பின்னர் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

சிதறி கிடக்கும் கற்கள்

ஹூப்ளி காவல் நிலையம் தாக்குதல் தொடர்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி கவுன்சிலரின் கணவர் உள்பட  88 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹூப்ளி போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். இந்நிலையில், குற்றவாளிகளை தண்டிப்பதில் சமரசம் இல்லை என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதியாக தெரிவித்தார். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பசவராஜ் பொம்மை

விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமரசம் என்ற கேள்விக்கே இடமில்லை. காவல் நிலையத்தை தாக்கி சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டவர்கள், கொடூரமான குற்றத்தை செய்திருக்கிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.