மக்கள் மகிழ்ச்சியாக இருக்க இந்தியாவுக்கு சிறிய மாநிலங்கள் தேவை.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.

 
ஆஷிஷ் தேஷ்முக்

புதிதாக 75 மாநிலங்களை உருவாக்குங்க, மக்கள் மகிழ்ச்சியாக இருக்க இந்தியாவுக்கு சிறிய மாநிலங்கள் தேவை என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

மகாராஷ்டிரா காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கடோல் சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆஷிஷ் தேஷ்முக், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள 4 பக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் இன்று 29 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் சராசரியாக 4.90 கோடி மக்கள் உள்ளனர். அமெரிக்காவில் 50 மாநிலங்களில் 65 லட்சம் மக்களும், சுவிட்சர்லாந்தில் 26 மண்டலங்களில் 33 லட்சம் மக்களும் உள்ளனர். 

பிரதமர் மோடி
மகாராஷ்டிரா மாநிலத்தை ஒட்டியுள்ள சிறிய மாநிலங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன. இருப்பினும் விதர்பா (நாக்பூர் மற்றும் அமராவதி மண்டலங்கள் அடங்கிய பகுதி) போன்ற வளமான பகுதி இன்னும் அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட சிறிய அண்டை மாநிலங்கள் தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், அதிகரித்த நீர்ப்பாசனம், சுகாதார வசதிகள், கல்வி, சட்டம் ஒழுங்கு, சாலைகள், குழாய் நீர், வாழ்க்கை தரம், ஏராளமான மின்சாரம் மற்றும் மாற்று வேலைகள் உள்பட பலதரப்பட்ட முன்னேற்றங்களை அனுபவித்து வருகின்றன. 

பா.ஜ.க.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் 10 நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பெரும்பாலான வளர்ச்சி குறிகாட்டிகளில் இது கீழே இருந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி குறியீடு மிகவும் குறைவாக உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்க இந்தியாவுக்கு சிறிய மாநிலங்கள் தேவை என்பதை இது நிரூபிக்கிறது. பா.ஜ.க.வின் கொள்கை சிறிய மாநிலங்களுக்கு ஆதரவாகவே உள்ளது. எனவே 30வது மாநிலமாக விதர்பா உருவாக்கத்துடன் 75@75 (75வது சுதந்திர தினத்தில் 75 மாநிலங்கள்) என்ற கருத்தை தொடங்க வேண்டும் என்பது ஒரு தாழ்மையான வேண்டுகோள். மேலும் இது தொடர்பான அறிவிப்பை ஆகஸ்ட் 15ம் தேதியன்று நாட்டு மக்களுக்கு உங்கள் உரை/ உரையாற்றுதல் வாயிலாக வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.