நடிகை அமலாபாலுக்கு திருவைராணிகுளம் கோவிலில் அனுமதி மறுப்பு
திருவைராணி குளம் கோவிலுக்குள் செல்ல நடிகை அமலாபாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
கேரளா மாநிலத்தில் எர்ணாகுளத்தில் அமைந்துள்ளது திருவைராணி குளம் கோயில். இக்கோவிலுக்குள் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அமலாபால் கோவிலுக்குள் செல்ல மறுக்கப்பட்டதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டாலும் அமலா பாலுக்கு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் வேறு வழியில்லாமல் அமலா பால் கோவில் நுழைவு வாயில் இருந்தபடியே தரிசனம் செய்துவிட்டு திரும்பி இருக்கிறார்.
திருவைராணிகுளம் கோயில் நிர்வாகத்தின் இந்த செயலுக்கு கண்டனம் வலுத்து வருகின்றது. இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் ஆர்.வி. பாபு இது குறித்து தனது முகநூல் பக்கத்தில், மத நம்பிக்கை இல்லாத இந்து ஒருவரை கோயில் நிர்வாகியாக அனுமதிப்பதும், மத நம்பிக்கை உள்ள மாற்று மதத்தினரை கோயிலுக்குள் அனுமதிக்காததும் எந்த மாதிரியான தர்க்கம் என்று கேட்டிருக்கிறார்.
இதேபோன்று திருப்பதி போன்ற கோயில்களில் பின்பற்றப்படும் வழக்கங்களை திருவைராணி குளம் கோயில் நிர்வாகமும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார் .
அமலா பால், கேரள மாநிலத்தில் பிறந்தவர்தான். கிறிஸ்தவ மதத்தினை சேர்ந்தவர், கொச்சின் கல்லூரியில் படிப்பை முடித்தவர். 2009 ஆம் ஆண்டில் நீலதம்புரா மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர். மைனா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பிரபலமானார். விஜய் ,விக்ரம் உடன் நடித்து முன்னணி நடிகையாக இருந்த அமலாபால் இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து 2014 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார் . ஆனால் 2017 ஆம் ஆண்டிலேயே கருத்து வேறுபாட்டினால் விவகாரத்தை செய்தார். அதன்பின்னரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.