பிரதமராவீர்கள்.. ராகுல் காந்தியை ஆசிர்வாதம் செய்த லிங்காயத் சாமியார்

 
ராகுல் காந்தியை ஆசிர்வதித்த சாமியார்

கர்நாடகாவில் லிங்காயத் மடத்தின் சாமியார் ஒருவர், ராகுல் காந்தியை நீங்கள் பிரதமராவீர்கள் என்று ஆசிர்வாதம் செய்தது பரபரப்பாகியுள்ளது.

கர்நாடகாவில் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் லிங்காயத் சமூகத்தை  சேர்ந்தவர்கள். அவர்கள் வாக்குகள் பெரும்பாலும் சிந்தாமல் சிதறாமல் பா.ஜ.க.வுக்கு செல்லும். தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர். அடுத்த ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் லிங்காயத் சமூகத்தை கவர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

பசவராஜ் பொம்மை

காங்கிரஸ் கட்சியும் லிங்காயத் வாக்குகளை பெற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீமுருகராஜேந்திர மடத்துக்கு சென்றார். அங்கு  மடாதிபதி, சீடர்களை சந்தித்து பேசினார். அப்போது,  சாமியார்களில் ஒருவரான ஹாவேரி ஹோசமுத் சுவாமி, இந்திரா காந்தி பிரதமர், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார், இப்போது ராகுல் காந்தி லிங்காயத் பிரிவில் தீட்சை பெற்றுள்ளார், அவர் பிரதமராக வருவார் என ஆசிர்வாதம் செய்தார்.

லிங்காயத் சாமியார்களுடன் ராகுல் காந்தி

அப்போது மடத்தின் தலைவர் ஸ்ரீ சிவமூர்த்தி முருகா சரணரு குறுக்கிட்டு, தயவுசெய்து இதை சொல்லாதீர்கள்,இது மேடையல்ல. மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். சாமியார் ராகுல் காந்தியை பிரதமராக ஆவார் என்று ஆசிர்வாதம் செய்தததால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.