ஒரு எலும்பு, தலைமுடி ஷரத்தாவோடதுதான் - டி.என்.ஏ. சோதனை முடிவுகள்
மெக்ராலி காட்டில் மீட்கப்பட்ட எலும்பு, தலைமுடி ஷரத்தாவுடையது தான் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மும்பை அடுத்த வசாய் பகுதியைச் சேர்ந்தவர் ஷரத்தா. இவர் டெல்லியில் காதலனுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார். அப்போது காதலன் அப்தர் அமீனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
கடந்த ஆண்டு மே மாதம் இந்த கொடூர கொலை நிகழ்ந்திருக்கிறது. காதலி ஷரத்தாவை கொலை செய்த பின்னர் உடலை 36 துண்டுகளாக வெட்டி மெக்ராலி காட்டில் வீசியதாக டெல்லி போலீசில் வாக்குமூலம் அளித்திருக்கிறார் அப்தர் அமீன். இந்த கொலை வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஷரத்தாவின் காதலன் அப்தர் அமீன் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் மெக்ராலி காட்டில் இருந்து மீட்கப்பட்ட எலும்பு, தலைமுடியை ஆய்வுக்கு அனுப்பி இருந்தனர் போலீசார். டிஎன்ஏ பரிசோதனையில் ஒரு எலும்பு மற்றும் தலைமுடி ஷரத்தாவுடையது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மைட்டோகாண்ட்ரியா சோதனை முடிவுகள் வந்ததை அடுத்து அந்த ஒரு எலும்பு , தலைமுடி ஷரத்தாவின் தந்தை மற்றும் சகோதரரின் டிஎன்ஏ உடன் ஒத்துப் போகிறது என்கிறார் டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் சாகர் பிரீத் ஜூடோ.