14 வயது மாணவிக்கு ஆண் குழந்தை.. ஆந்திராவில் அதிர்ச்சி..
ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனையில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள குருகுல பாடசாலையில், பட்டியலின மாணவி ஒருவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து அவர், அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு திடீரென சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்குச் சென்ற மூத்த அதிகாரி ஒருவரும் , இந்த சம்பவத்தை உறுதி செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “ குருகுல பாடசாலையில் பயிலும், பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த மாணவி திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக கூறியிருக்கிறார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. சிறுமி கர்ப்பமாக இருந்ததற்கான அறிகுறிகளை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் எவர் கூறினார்.
"மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் அந்த சிறுமி குழந்தையைப் பெற்றெடுப்பதைக் கண்டு குழப்பமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், கர்ப்பத்தின் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், சிறுமியின் பெற்றோரிடம் இருந்து தகவல்களை சேகரித்து வருவதாகவும் கூறினார். இந்த சம்பவம் குருகுல பாடசாலையின் மோசமான நிலையைக் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு மிகத் தெளிவாக தெரிவதாகவும் கண்டனம் எழுந்துள்ளன. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தியுள்ளது.