ஜோத்பூர் வன்முறை: 144 தடை உத்தரவு அமல்.. 97 பேர் கைது..
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 97 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கொடி மற்றும் ஒலிபெருக்கி பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதையடுத்து, ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இந்த வன்றை சம்பவத்தால் 4 போலீசார் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, ஜோத்பூர் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து ஜோத்பூர் மாவட்டத்தின் உதய் மந்திர், நகோரி கேட், கந்தா பல்சா, பிரதாப் நகர், தேவ் நகர், சூர் சகர் மற்றும் சர்தர்புரா உள்ளிட்ட 10 காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். அத்துடன் ஜோத்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ஜோத்பூர் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.