லிப்ட் அறுந்து விழுந்து 8 பேர் பலி.. காவல்துறைக்கு உடனே தெரிவிக்காதது ஏன்?? உறவினர்கள் கேள்வி..
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆஸ்பயர்-2 என்கிற அடுக்குமாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனியாருக்கு சொந்தமான இந்த கட்டடத்தில் இன்று வழக்கம் போல் பணியாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது திடீரென அந்த உயரடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்த லிஃப்ட் அறுந்து விழுந்துள்ளது. இதில் 8 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் லிஃப்ட் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தானது காலை 7.30 மணியளவில் நடந்துள்ளதாகவும், ஆனால் 11 மணியளவிலே போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து கட்டட உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் , விபத்தில் சிக்கி சஞ்சய் பாபுபாய் நாயக், ஜெகதீஷ் ரமேஷ்பாய் நாயக், அஷ்வின்பாய் சோமாபாய் நாயக், முகேஷ்பாய் பாரத்பாய் நாயக், முகேஷ் பாரத்பாய் நாயக், ராஜ்மல் சுரேஷ்பாய் கராடி, பங்கஜ்பாய் சங்கர்பாய் கராடி உள்ளிட்ட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தாக அடையாளம் காணப்பட்டு பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த 8 கூலித்தொழிலாளர்களும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் விபத்து நடந்த உடனேயே காவல்துறைக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்றும், தாமதமாக தெரிவிக்க காரணம் என்ன என்றும் கட்டடத்தில் வேலை செய்த ஊழியர்களின் உறவினர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இற 8 பேரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.