7வது நாளாக இன்றும் 5ஜி ஏலம்.. கடந்த 6 நாட்களில் மட்டும் இத்தனை லட்சம் கோடிக்கு ஏலாமா??
5ஜி அலைக்கற்றை விற்பனை தொடர்பாக, இன்று 7வது நாளாக ஏலம் நடைபெறுகிறது. ஏற்கனவே கடந்த 6 நாட்களாக நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.50 லட்சம் கோடிக்கு அலைக்கற்றை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தற்போது இணையதள சேவைக்கு 4ஜி அலைக்கற்றயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இணைய பயன்பாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அதிவேக இணையதள வசதியை கொடுக்கும் 5ஜி அலைக்கற்றை விற்பனைக்கான ஏலம் கடந்த 26ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 6 நாட்களாக நடைபெற்ற ஏலம் இன்று 7வது நாளை எட்டியிருக்கிறது. இந்த ஏலத்தில், ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்று அலைக்கற்றையை சொந்தமாக்கி வருகின்றன.
முதல் நாள் ஏலத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வரை ஏலம் கேட்கப்பட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்தது. பின்னர் 2ம் நாள் முடிவில் இந்த தொகை ரூ.1,49,454 கோடி வரை கேட்கப்பட்டதாகவும், தொடந்து 3-வது நாள் முடிவில் ரூ.1,49,623 கோடியை ஏலம் எட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் 23 சுற்றுகள் நடைபெற்ற , 4ஆம் நாள் ஏலத்தின் முடிவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகை ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 855 கோடியை தாண்டியது. பின்னர் 5வது நாள் ஏலமானது 30 சுற்றுகள் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகை ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 967 கோடி வரை கேட்கப்பட்டது.
தொடர்ந்து 6வது நாளாக நேற்று 7 சுற்றுகள் ஏலம் நடைபெற்றது. இதில் 163 கோடி ரூபாய்க்கு அலைக்கற்றை ஏலம் போனது. இதுவரை கடந்த 6 நாட்களாக நடந்த 37 சுற்றுகளில் 5ஜி ஏலத்தில் ரூ.1,50,130 கோடிக்கு அலைக்கற்றை விற்பனை நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம் 7வது நாளாக இன்றும் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு மட்டத்தில் ரேடியோ அலைகளுக்கான தேவை அதிகரித்திருப்பதை அடுத்து அலைக்கற்றை ஏலம் 7வது நாளைக்கு தள்ளி போயுள்ளதாக தொலைத்தொடர்பு வட்டார அதிகாரிகள் கூறுகின்றனர்.