கேரளாவில் 6 மாதங்களில் இடிக்கப்படும் 64 சொகுசு விடுதிகள்..
கேரள மாநிலம் ஆலப்புழா அடுத்த வேம்பன்நாட்டுகாயலில் விதிகளை மீறி கட்டப்பட்ட 64 சுற்றுலா விடுதி கட்டிடங்கள் மாவட்ட நிர்வாகத்தால் இடிக்கப்பட்டு வருகின்றன.
எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி மரட பகுதியில் கடலோர மேலாண்மை சட்டத்தை மீறி கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடி சொகுசு குடியிருப்புகள் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. தற்போது அதேபோல ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள நெடியந்தூரத்து தீவில் 64 சுற்றுலா விடுதிகளை இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர விடுதிகளை 11 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2005 ஆம் ஆண்டு 700 கோடி ரூபாய் செலவில் தனியார் நிறுவனம் ஒன்று கட்டத் தொடங்கியது. பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், இந்த சொகுசு விடுதிகள் அனைத்தும் கடலோர மேலாண்மை சட்டத்தை மீறி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்தக் கட்டிடங்களை முழுமையாக இடித்து அகற்ற, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 அண்டுகளாக இடிக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இடிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. 6 மாதங்களுக்குள் 64 பங்களாக்களை இடிக்கும் பணி முழுமையாக முடிவடையும் என்றும், கட்டிடக்கழிவுகளை வேம்பன்நாட்டுக்காயல் நீரை பாதிக்காத வகையில் அப்புறப்படுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.