அதானி குழும முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு - உச்சநீதிமன்றம் அதிரடி

 
supreme court

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் அதானி குழுமம் பல ஆண்டுகளாக முறைகேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டியது. ஆனால் இதனை அதானி குழுமம் மறுத்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும நிறுவன பங்குகளின் விலை கடும் வீழ்ச்சி கண்டது. மேலும், ஹிண்டன்பர்க்-அதானி விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், தலைமையிலான அமா்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

adani

அப்போது அதானி - ஹிண்டென்பர்க் விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி ஏம்.எம். சப்ரே தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பிப்பதாகவும், இந்த குழுவில், முன்னாள் நீதிபதிகள் ஓ.பி. பட், ஜே.பி. தேவ்தத், கேவி காமத், நந்தன் நீலகேணி ஆகியோர் சிறப்பு நிபுணர் குழுவில் இடம்பெறுவார்கள். பொதுமக்களின் பணம் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. சிறப்பு நிபுணர் குழு, இரண்டு மாதத்தில் விசாரணையை முடித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் . விசாரணை நடத்த அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு நிபுணர் குழுவுக்கு மத்திய அரசு, நிதிசார்ந்த சட்ட அமைப்புகள், செபி நிர்வாகி உள்ளிட்டோர் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.