டெல்லி உள்பட 5 மாநிலங்களில் வெயில் கொளுத்த போகுது.. அனல்காற்று வீசும் என ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..
டெல்லியில் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இன்று (வெள்ளிக்கிழமை) பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வடமாநிலங்கல் பலவற்றில் சராசரி வெயில் 40 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகி வருகிறது. அந்தவகையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், டெல்லி, ஹரியானா, ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, . தற்போதே இந்த மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸ் (113 டிகிரி பாரன்ஹீட்) அளவை தாண்டி வெயில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு வடமேற்கு மாநிலங்களில் கூடுதலாக 2 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கும் எனவும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் வெப்பநிலை மே முதல் வாரம் வரை நீடிக்கும் எனவும், அதன்பிறகு மழை அதிகரிக்கும்போது வெப்ப நிலை குறையும் எனவும் கூறியிருக்கிறது. தற்போது மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி வருவதாகவும், டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களில் வெப்பநிலை அதிகரிப்பினால் அனல் காற்று வீசக்கூடும் என ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜம்முவிலும் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இங்கு நிலவும் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இன்று 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என கூறப்பட்டுள்ள தலைநகர் டெல்லியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அங்கு நேற்று (வியாழக்கிழமை) அதிகபட்சமாக 43.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது கடந்த 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவே என கூறப்படுகிறது.