ஜோதிமணி உள்ளிட்ட 4 காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட்..
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரில் இருந்து மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி உள்ளிட்ட 4 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு , ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த ஒரு வாரமாகவே மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் முடங்கியது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளுடன் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மதியம் 3 மணிக்கு மீண்டும் அவை கூடியபோதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அவைத்தலைவர் இருக்கை முன்பாக நின்று பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டதால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் அறிவித்தார். காங்கிரஸ் எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டி.என்.பிரதாபன் ஆகிய 4 பேரை அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடப்பு கூட்டத்தொடரில் இருந்து முழுவதுமாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.