சற்று குறைந்தது கொரோனா தினசரி பாதிப்பு.. கடந்த 24 மணி நேரத்தில் 3,324 பேருக்கு தொற்று உறுதி..
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 40 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா 3 வது அலை கிட்டத்தட்ட முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 800க்கும் கீழாக குறைந்தது, இதனையடுத்து மார்ச் 31 ஆம் தேதியுடன் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்பிறகு தற்போது கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 3,688 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் பாதிப்பு 3,324 ஆக குறைந்திருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,79,188 ஆக அதிகரித்துள்ளது.
பாதிப்பை போலவே கொரோனா இறப்பு எண்ணிக்கையும் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்திருக்கிறது. நேற்று இறப்பு எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அது 40 ஆக குறைந்திக்கிறது. .இதுவரை கொரோவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,23,843 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் கடந்த ஒரே நாளில் 2,876 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளன. இதனையடுத்து இதுவரை இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,36,253 ஆக அதிகரித்திருக்கிறது.
இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 19,092 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 189 கோடியே 17 லட்சத்து 69 ஆயிரத்து 346 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,95,267 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.