36,145 – ஒரே நாளில் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை
கொரோனா நோய்த் தொற்று உலகை அச்சுறுத்து வருகிறது. பெரிய வல்லரசு நாடுகளும் இதைப் பார்த்து பயந்துகொண்டிருக்கிறது. ஏனெனில், கொரோனா தடுப்பு இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பல நாட்டு விஞ்ஞானிகளும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இங்கிலாந்து நாட்டில் இந்த முயற்சி ஆரோக்கியமான முன்னேற்றம் அடைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
மார்ச் முதல் கொரோனா நோய்த் தொற்று அதிமாகிக்கொண்டிருக்கும் செய்திகளால் நிறைந்திருக்கிறது. இந்த நிலையில், ஆறுதலான செய்தி ஒன்று வந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் இந்திய அளவில் கோவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 36,145 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,85,576-ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் வீதமும், 64 சதவீதம் என்ற புதிய உச்சத்தை நோக்கி வேகமாக நெருங்கி வருகிறது.
இன்று இது 63.92 சதவீதம் என்ற அளவில் உள்ளது. கோவிட்19 தொற்றுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும், குணமடைவோர் எண்ணிக்கைக்கும் இடையேயான வித்தியாசம் அதிகரித்து வந்த நிலைமாறி, தற்போது அதிக அளவிலான நோயாளிகள் குணமடைந்து வருவது தெரியவந்துள்ளது. இந்த இடைவெளி 4 லட்சத்தைக் கடந்து, தற்போது 4 லட்சத்து 17 ஆயிரத்து 694 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை விட (4,67,882), குணமடைவோர் எண்ணிக்கை 1.89 மடங்கு அதிகமாகும்.
இம்மாதிரியான நம்பிக்கை தரும் செய்திகளே கொரோனா நோய்த் தொற்றி இருப்பவர்களுக்கு பெரும் ஆறுதலை அளிக்கும் என்பதே பலரின் எண்ணம்.