3.60 கோடி பேர் டிக்கெட் இன்றி பயணம் : ரூ.2,200 கோடி அபராதம் வசூலிப்பு - ரயில்வே நிர்வாகம் தகவல்..

 
railway station

ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 3½ கோடி பேரிடம் இருந்து  ரூ.2,200 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம்  தெரிவித்துள்ளது.  

ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்பவர்களிடமிருந்து ரயில்வே  நிர்வாகம் அபராதம் வசூலித்து வருகிறது.  பொதுவாக ரயிலில் டிக்கெட் இன்றி பயணிப்பபவர்கள்  டிக்கெட்டுக்கான அசல் கட்டணத்துடன், குறைந்தபட்சம் ரூ.250 அபராதமாக செலுத்த வேண்டும். ஆனால் பயணி அதை செலுத்த மறுத்தாலோ, அவரிடம் பணம் இல்லாவிட்டாலோ வழக்குபதிவு செய்யப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார். அவர் அதிகபட்சமாக ரூ.1,000 வரை அபராதம் விதிப்பார். அந்த அபராதத் தொகையையும் பயணி செலுத்தவில்லை என்றால், 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்..   அந்தவகையில், கடந்த நிதியாண்டில் டிக்கெட் இன்றி பயணித்தவர்களின் விவரங்கள் மற்றும் அபராதத்தொகை குறித்து, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்  மூலம் மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் சந்திரசேகர் குவார் கேட்டிருந்தார்.

ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்த திட்டம் - ரயில்வே நிர்வாகம் முடிவு..

அதற்கு ரயில்வே நிர்வாகம் அளித்த தகவலில்,  2022-23-ம் ஆண்டில் ரெயில்களில் டிக்கெட் இன்றி அல்லது தவறான டிக்கெட்டுடன் பயணித்த 3.60 கோடி பேர் பயணித்ததாகவும், அவர்களிடமிருந்து  ரூ.2 ஆயிரத்து 200 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது 2021-22-ம் ஆண்டில்  2.70 கோடி பேர் டிக்கெட் இன்றி பயணித்துள்ளனர். அப்போது ரூ.1,574 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு டிக்கெட் இன்றி பயணித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடி அளவிற்கும், அபராதத்தொகை ரூ.700 கோடியும் அதிகரித்திருக்கிறது.  இதில் சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் பல சிறிய நாடுகளின்  மக்கள் தொகையை விட  2022-23-ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்து பிடிபட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார்கள்.

இதற்கிடையே ரயில்வே நிர்வாகம் அளித்த தகவலின்படி, 2022-23-ம் ஆண்டில்  2.7 கோடி பயணிகள் டிக்கெட் பெற்றிருந்ததும்,  காத்திருப்பு பட்டியலில் இருந்ததால் ரெயிலில் பயணம் செய்ய முடியாமல் போனது தெரியவந்துள்ளது. இது முக்கிய வழித்தடங்களில் ரெயில் சேவை பற்றாக்குறையை காட்டுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.  இவ்வாறு டிக்கெட் பெற்றும் பயணம் செய்ய முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை முந்தைய நிதியாண்டில் 1.65 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது