கேரளாவில் மீண்டும் தலைதூக்கும் ஷிகெல்லா வைரஸ்.. 3 சிறுவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி..
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலே முடிவுக்கு வராத நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 3 சிறுவர் சிறுமிகளுக்கு ஷிகெல்லா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. கொரோனா 4வது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்த நிலையில் அதற்கேற்ப பாதிப்பு விகிதமும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வது, மக்களிடையே மீண்டும் பீதியை அதிகரிக்கச்செய்கிறது. மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ, மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக நேரிடுமோ என கவலைகள் சூழ ஆரம்பித்துவிட்டன.. கொரோனா பாதிப்புகளிலிருந்தே மக்கள் மீளாத நிலையில், அதற்குள்ளாக புதிது புதிதாக வைரஸ்கள் பரவத் தொடங்கியுள்ளன.
அந்தவகையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 3 சிறுவர் சிறுமிகளுக்கு ஷிகெல்லா வைரஸ் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. கோழிக்கோடு அருகே உள்ள எரஞ்சிக்கல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு சில தினங்களுக்கு முன்பு வயிற்றுப்போக்கு இருந்துள்ளது. இதையடுத்து அவர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே எரஞ்சிக்கல் பகுதியில் ஷிகெல்லா வைரஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிறுமியின் ரத்த மாதிரி புனே ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில், சிறுமிக்கு ஷிகெல்லா வைரஸ் பரவியது தெரியவந்தது.
இதனையடுத்து கேரள சுகாதாரத்துறை, எரஞ்சிக்கல் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே. ஷிகெல்லா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு சிறுவன், சிறுமிக்கும் அதே நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளனர். அவர்களுக்கும் பரிசோதனை செய்து பார்த்ததில், ஷிகெல்லா தாக்கி இருப்பது உறுதியாகியுள்ளது. 3 பேரின் உடல்நிலையும் சீராக, திருப்திகரமான நிலையில் தற்போது இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனயடுத்து மேலும் நோய் பரவாமல் தடுக்க கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஷிகெல்லா வைரஸ் பொதுவாக அசுத்தமான தண்ணீர் மூலம் பரவுவதாக கூறப்படுகிறது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தலைவலி ஆகியவை இந்த நோய் தாக்கியதற்கான அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.