டெல்லி தீ விபத்து - பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
டெல்லி தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டெல்லி முன்ட்கா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள வணிக வளாகம் வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நேற்று மாலை 4 மணிக்கு தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத்துறையினர் விரைவாக வந்து தீயை அணைக்க போராடினர். நான்கு மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் மட்டுமே தீ ஏற்பட்டது. இதன் பின்னர் தீ அதிவேகமாக பரவி இரண்டு, மூன்று, நான்காவது தளத்திலும் பரவியது. இதுவரை தீ விபத்தில் 27 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. மொத்தமாக 68 பேர் மீட்கப்பட்டுள்ளனர் . இதில் தீக்காயங்களுடன் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார் . டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நிகழ்ந்த உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், டெல்லி விபத்தில் பல உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.