பங்குச் சந்தைகளில் பலத்த அடி.. சென்செக்ஸ் 897 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 897 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறிய சரிவுடன் தொடங்கியது.இருப்பினும் பிப்ரவரியில் சில்லரை விலை பணவீக்கம் குறைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் பின்னர் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. ஆனால் பின்னர் சர்வதேச நிலவரங்களால் பங்கு வர்த்தகம் படிப்படியாக சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டெக் மகிந்திரா நிறுவன பங்கினை  தவிர்த்து மற்ற 29 நிறுவன பங்குகளின் விலையும் குறைந்தது.

டெக் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 769  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,834  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 154 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.258.71 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.89 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 897.28 புள்ளிகள் குறைந்து 58,237.85 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 258.60 புள்ளிகள் சரிவு கண்டு 17,154.30 புள்ளிகளில் முடிவுற்றது.