2 ஆண்டு ஊதியத்தை நிவாரணமாக அளித்த கௌதம் கம்பீர்..
2 ஆண்டுகளுக்கு தனது ஊதியம் முழுவதையும் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக எம்.பியும், கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது, உயரிழந்தோர் எண்ணிக்கையும் 50 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
இந்தத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதுமான நிதி தேவை என்பதால், பிரதமர் கேர்ஸ் நிதி (PM—CARES Fund) உருவாக்கப்பட்டு அதில் நிதியளிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், தனி நபர்கள், எம்.பி.க்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இதில் பாஜக எம்.பி.யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஏற்கெனவே ரூ.1 கோடி அறிவித்தார். இ்ப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அடுத்த 2 ஆண்டுகளுக்கு தனது ஊதியம் முழுவதையும் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
People ask what can their country do for them. The real question is what can you do for your country?
I am donating my 2 year’s salary to #PMCaresFund. You should come forward too! @narendramodi @JPNadda @BJP4Delhi #IndiaFightsCorona
— Gautam Gambhir (@GautamGambhir) April 2, 2020
கௌதம் கம்பீர் ட்விட்டரில் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், “இந்த நாடு தங்களுக்காக என்ன செய்துவிட முடியும் என்று கேட்கிறார்கள். ஆனால், உண்மையான கேள்வி என்னவென்றால், இந்த தேசத்துக்காக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள், என்ன முடியும் என்பதுதான். நான் என்னுடைய 2 ஆண்டு ஊதியத்தை முழுவதுமாக பிரதமர் கேர்ஸ் நிதிக்கு வழங்கப்போகிறேன். நீங்களும் நிதியுதவி அளிக்க முன் வாருங்கள்” என அழைப்பு விடுத்துள்ளார்.