டெல்லி தீ விபத்தில் 27 பேர் உடல் கருகி உயிரிழப்பு - 2 பேர் கைது!!
டெல்லி வணிகக்கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டு 27 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கே நேற்று மாலை திடீரென தீப்பற்றி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 27 பேர் உடல் கருகி நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தகவலறிந்து 24 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு படையினர் தீயை போராடி கட்டுப்படுத்தியுள்ளனர்
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமுற்றோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ,மத்திய அமைச்சர்கள் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 27 பேரை பலி கொண்ட டெல்லி தீ விபத்து தொடர்பாக வணிக வளாகத்தில் நிறுவனம் நடத்திய 2 பேரை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வணிக வளாகத்திற்கு தீயணைப்பு துறையிடம் இருந்து அனுமதிச்சான்று வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் கட்டிட உரிமையாளர் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.