சாலையோரம் நடந்து சென்ற கல்லூரி மாணவி மீது மோதிய கிரேன் வாகனம்- பதைபதைக்கவைக்கும் காட்சி

 
Accident

பெங்களூருவில் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது வேகமாக வந்த கிரேன் வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு நகரில் ஒயிட் பீல்டு என்ற பகுதியில் கடந்த 2 ஆம் தேதி நூர் பிஜா என்ற 19 வயது மாணவி கல்லூரியை முடித்து சாலையில் ஓரமாக நடந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொபோது சாலையில் வேகமாக வந்த கிரேன் வாகனம் ஒன்று மாணவி நடந்து சென்று கொண்டிருப்பதை கண்டு கொள்ளாமல் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து அங்கிருந்து சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 




படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். மாணவி உயிரிழந்ததை அடுத்து ஒயிட் பீல்டு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்து நடந்த குறிப்பிட்ட பகுதியில் உள்ள சாலையில் அங்குள்ள தனியார் கல்லூரி ஆக்ரமிப்பு செய்துள்ளதாகவும் அதனால் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்தில் விபத்துக்கள் பதிவாகி பலர் இறந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்தது வேகத்தடையும் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது விபத்துகளுக்கு கூடுதல் காரணமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்த விபத்து தொடர்பாக ஒயிட் பீல்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக விபத்தை ஏற்படுத்திய கிரேன் வாகனம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.